பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களை கைதுசெய்வதற்காக சீருடையிலும் சிவில் உடையிலும் பெருந் திரளான பொலிசார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
நத்தார் பண்டிகை மற்றும் புதுவருட பிறப்பை முன்னிட்டு விருந்துபசாரங்களை நடாத்துவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுள்ளனர். கொரோனா வைரஸ் துரிதமாக பரவுவதை தடுப்பதே இதன் நோக்கமாகும். பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை பேணி பங்களிப்பு செய்யுமாறு பொலிசார் தொடர்ந்தும் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
கொழும்பில் 9 பொலிஸ் அதிகார பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. எச்சந்தர்ப்பத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து அப்பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வெளியே செல்ல முடியாது. அவ்வாறு வெளியேறுபவர்களுக்கு எதிராக சட்டம் தீவிரப்படுத்தப்படும். ஒரு சில பகுதிகளை துரிதமாக விடுவிக்க முடிந்தது. அப்பகுதி மக்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றியதன் மூலமும், பயணக் கட்டுப்பாடுகளை பேணியதன் மூலமும் புதிய கொத்தணிகள் ஏற்படாதிருந்தன. தனிமைப்படுத்தப்பட்டுள்ள சட்டதிட்டங்களை நீக்குவதற்கு பங்களிப்பை வழங்குவது பொதுமக்களது பொறுப்பாகும்.