மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் கண்டறிவதற்கு நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவின் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விளக்கமறியலில் கொரோனா தொற்றாளர்கள் இருப்பதாக தெரியவந்த நிலையில் இந்த அமைதியின்மை ஏற்பட்டதாக அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையில் கடந்த 29 ம் திகதி மாலை 3.30 மணியளவில் எம் 02 வார்ட் தொகுதிக்கு அருகில் கைதிகள் கலகம் ஏற்படும் வகையில் செயற்பட்டதாக இவ் அறிக்கையில் குறிப்பிடபடுகிறது. இச்சந்தர்ப்பத்தில் கைதிகளுக்கு உணவு வழங்கப்பட்டுக்கொண்டிருந்ததால் பாதுகாப்பு கதவுகள் திறக்கப்பட்டிருந்தன. இதன்போது கைதிகள் சிலர் அந்த வார்ட் தொகுதியிலிருந்து எல் வார்ட் தொகுதிக்கு சென்று எல் வார்ட் தொகுதியிலிருந்த சிலரின் அறைகளின் பூட்டை உடைத்துள்ளனர். எல் வார்ட் தொகுதியானது கொவிட் 19 காரணமாக மூடப்பட்டிருந்தாகவும் அங்கிருந்து எந்தவொரு கைதிக்கும் வெளியேற வாய்ப்பு இருக்கவில்லையெனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
எனினும் அங்கு பூட்டை உடைத்ததுடன் அங்கிருந்த கைதிகளும் வெளியில் வந்து ஏனைய வார்ட் தொகுதிகளின் கதவுகளை உடைத்து கைதிகளை வெளியில் கொண்டுவந்து ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்ததாக இவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது. சில பிரதான கோரிக்கைகளை முன்வைத்து கைதிகள் இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பிணை வழங்கப்பட்டுள்ள கைதிகளை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைத்திருக்காது வீடுகளுக்கு அனுப்ப வேண்டும், சகல கைதிகளுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், கொவிட் தொற்றாளர்களை மஹர சிறைச்சாலையிலிருந்து வெளியில் கொண்டு செல்ல வேண்டும் தகுந்த உணவு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தயார் என பிரதான சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்த போதிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களைக்கொண்டு பல்வேறு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி சத்தமிட்டுக்கொண்டு பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வருகைதந்துள்ளனர். சிறைச்சாலைகள் அதிகாரிகள் இருவரை பணயக் கைதிகளாக வைத்துக்கொண்டே அவர்கள் இச்செயற்பாடுகளை முன்னெடுத்ததாக குழு அறிக்கையில் தெரியவந்தது.