நேற்றைய தினம் 703 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவிக்கிறது. அத்துடன் நேற்று 2 கொரோனா மரணங்கள் பதிவாகியதுடன் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று இனங்காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்கள் 703 பேரும் உள்ளுரில் இனங்காணப்பட்டவர்கள். இவர்களில் கூடுதலானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியதுடன் அவ் எண்ணிக்கை 371 ஆகும். பொரள்ளையிலிருந்து 192 பேர் இனங்காணப்பட்டனர். கொம்பனித் தெருவில் 32 பேரும் தெமட்டகொடவிலிருந்து 31 பேரும் அவிசாவளையிலிருந்து 37 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 102 ஆகும். இவர்களில் கூடுதலானோர் மஹர சிறைச்சாலையிலிருந்தே பதிவாகினர். அவ் எண்ணிக்கை 49 ஆகும். கம்பஹாவிலிருந்து 10 பேரும் களனியிலிருந்து 8 பேரும், மீரிகம , நிட்டம்புவ மற்றும் ஆகிய பகுதிகளிலிருந்து 6 தொற்றாளர்கள் வீதமும் அடையாளம் காணப்பட்டனர். களுத்துறை மாவட்டத்தில் நேற்றைய தினம் 64 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இன்று காலை வரை மினுவாங்கொட ஆடைக் கைத்தொழிற்சாலை பேலியகொட மீன் வர்த்தக சந்தையுடன் தொடர்புபட்ட கொரோனா கொத்தணி 25 ஆயிரத்து 21 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 17 ஆயிரத்து 396 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 580 ஆகும். 7 ஆயிரத்து 634 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர். பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 804 ஆகுமென சுகாதார பிரிவு தெரிவிக்கிறது.
2 கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகியதுடன் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது. நிரந்தர வசிப்பிடம் தெரியாத 62 வயதுடைய நபர் ஒருவர் ஹோமகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 7 ம் திகதி உயிரிழந்தார். அத்துடன் கொழும்பு 13 ஜெம்பட்டாவீதியை வசிப்பிடமாக கொண்ட 74 வயதுடைய ஆண் ஒருவரும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்தார்.