உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தன்னுடன் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது தாக்குதல் குறித்து சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரை விடுதலை செய்வதற்கான குறுகிய நோக்கு காணப்பட்டிருக்கலாமென முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஊடாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயிலிருந்து ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியமளித்த முன்னாள் இராணுவத் தளபதி ரிஷாட் பதியுதீன் அவ்வாறு தகவல்களை கேட்ட சந்தேக நபர் தற்போது விளக்கமறியலில் உள்ளதாக தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை அடுத்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அப்போதய இராணுவத்தளபதியாக இருந்த மகேஷ் சேனாநாயக்கவுடன் தொடர்பை ஏற்படுத்தி சந்தேக நபர் ஒருவர் குறித்து கேட்டறிந்த சம்பவம் தொடர்பாக ஆணைக்குழு நேற்றைய தினம் விசாரித்தது.
இதன்போது அரச சிரேஷ்ட சட்டத்தரணி கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ம் திகதி நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் எவரேனும் ஒருவர் உங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி சந்தேக நபர் ஒருவர் குறித்து தகவல்களை கேட்டறிந்தாரா என கேள்வி எழுப்பினார். தாக்குதல் இடம்பெற்று ஒரு சில தினங்களுக்கு பின்னர் அப்போது அமைச்சரராக இருந்த ரிஷாட் பதியுதீன் தொலைபேசியின் மூலம் தெஹிவளை பகுதியில் அஹமட் என்ற நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டாரா என வினவியதாக மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.
முதலில் அதுகுறித்து தெரியவில்லையென தெரிவித்த தான் இதுதொடர்பாக கண்டறியப்படுமெனவும் அவர் சாட்சியமளித்த போது தெரிவித்தார். ஒரு சில மணி நேரங்களுக்கு பின்னர் மீண்டும் தன்னுடன் தொடர்பை ஏற்படுத்தி பதியுதீன் அச்சந்தேக நபர்குறித்தே கேட்டறிந்ததாக அவர் தெரிவித்தார். கைதுசெய்யப்பட்டுள்ள அவர் எனக்கு கீழ் உள்ள அமைச்சொன்றிலோ திணைக்களம் ஒன்றிலோ செயலாளரினதோ அல்லது இணைப்பாளரினதோ பிள்ளை, என்ன செய்ய முடியுமென தன்னிடம் கேட்டதாக மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.
அவ்வேளையில் நான் இதுகுறித்து போதிய விளக்கத்தை பெற்றிருக்கவில்லை. பின்னர் 3 வது தடவையாகவும் பேசினார் அப்போது இராணுவ புலனாய்வு பொறுப்பாளர்கள் கைதுசெய்யப்பட்ட அந்நபர் குறித்து அறிவுறுத்தியிருந்தனர். இதனால் நீங்கள் எனக்கு இப்போதல்ல இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் கதைக்குமாறு கடுமையாக கூறியதாக முன்னாள் இராணுவத் தளபதி பதிலளித்தார்.
இதன்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைமை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நீங்கள் ஏன் அச்சந்தர்ப்பத்தில் இவ்வாறு கடுமையாக கதைத்தீர்கள் என கேள்வி எழுப்பினார். அது முழுநாடும் பதற்றத்துடன் இருந்த வேளை, சம்பவத்திற்கு பின்னரும் எவரும் சரியாக நிர்வகிக்கவில்லை. இதனால் நான் உணர்ச்சிவசப்பட்டே பணிகளுக்கு துருப்பினர்களை ஈடுபடுத்தினேன். இவ்வாhறான ஒரு நிலையில் அவர் கேட்ட கேள்விகள் எனது பட்டியலில் முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
தாக்குதலுக்கு பின்னர் எந்தவொரு திட்டமிட்ட முறையிலும் நிர்வாகம் அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை. இதனால் சகல நடவடிக்கைகளும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். நீங்கள் நினைத்ததைப் போன்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவ்வாறான பல தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி எதை எதிர்பார்த்தார் என கேள்வி எழுப்பப்பட்டது. எவரேனும் ஒருவர் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் எவரேனும் ஒருவர் பொலிசுக்கோ அல்லது இராணுவத்திற்கோ அவரை விடுவிப்பதற்காகவே பேசுவார்கள். அவரது மனதிலும் இவ்வாறானதொரு நோக்கம் இருந்திருக்கலாம்.
எனினும் பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்ற வகையில் அவ்வேளையில் அவ்வாறான ஒரு நடவடிக்கையொன்றை நான் மேற்கொள்ள மாட்டேன் என முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்தார். எவ்வாறாயினும் இதனை அடுத்து முன்னாள் இராணுவத் தளபதியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்ந்தும் சாட்சிகளை பதிவு செய்தவுடன் ஊடகங்களுக்கு தகவல்களை திரட்ட இதற்குரிய சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.