நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றதாக அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தை புறக்கணித்த குற்றச்சாட்டில் இரண்டு வருடங்களுக்கு மேலாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஜாலிய விக்ரமசூரிய ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக குறித்த ஆணைக்குழுவில் முதல் முறையாக சாட்சியமளித்தார். அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில்; இருந்து அவர் ஸ்கைப்பின் ஊடாக இணைந்திருந்தார். தான் ஆறு வருடங்களாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக கடமையாற்றியதன் பின்னர் இரண்டரை வருடங்கள் இலங்கையில் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் பின்னர் அமெரிக்காவிற்கு செல்வதற்கு 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த போது தனக்கு வெளிநாடு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிக்கு வருகை தருமாறு அறிவுறுத்தப்பட்டது. தான் இந்நாட்டில் இருந்த காலப்பகுதியில் குற்றச்சாட்டோ, விசாரணைகள் தொடர்பிலோ குறிப்பிடாது, திடீரென வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டது எவ்வாறு என எப்.சி.ஐ.டீயிடம் வினவிய போது எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லையென ஜாலிய விக்ரமசூரிய குறிப்பிட்டுள்ளார். இணையத்தளம் ஒன்றில் வெளியான கடிதம் ஒன்றை காண்பித்து எப்.சி.ஐ.டீயினர் தன்னிடம் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் ராஜபக்;ஷ குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவு முறை தொடர்பிலும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகன் அமெரிக்காவில்; தங்கியுள்ள இடம், பெசில் ராஜபக்ஷவின் குடும்ப உறவினர்கள்; தொடர்பில் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமக்கு மேல் இடத்திலிருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் எப்.சி.ஐ.டீயின் அதிகாரிகள் தெரிவித்தாக ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை விசாரணைகளின் பின்னர் குறித்த அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அந்த தொலைபேசி உரையாடலில் இது ஊழல் ஒழிப்பு காரியாலயம் மற்றும் பொலிஸ் மாஅதிபர்; பூஜித் ஜயசுந்தரவின் கட்டளையென கேள்விப்பட்டதாக சாட்சி தெரிவித்தார். குறித்த சம்பவம் நவம்பர் மாதம் 17ஆம் திகதி இடம்பெற்றது. 18ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள். அவர்களுக்கு தேவையாக இருந்தது அன்றைய தினம் தன்னை கைது செய்து செய்தியொன்றை வெளியிடுவதே. அதன் ஊடாக அவரது பிறந்த நாளுக்கான கௌரவத்தை இல்லாமல் செய்வதற்கான தேவையான தேவையே காணப்பட்டது.
நவம்பர் 18ம் திகதி அதிகாலை இரண்டு மணியளவில் தன்னை புறக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர்; எப்.சி.ஐ.டீக்கு தான் அழைத்துச் செல்லப்பட்டு அதில் கிடைக்கப்பெற்ற சாட்சிகள் மாற்றப்பட்டு மீண்டும் கையெழுத்து பெறப்பட்டது. குறித்த வாக்குமூலம் மாற்றப்பட்டுள்ளதை தான் பின்னரே அறிந்துக் கொண்டதாகவும் எப்.சி.ஐ.டீ அதிகாரிகள் போலியான விடயங்களை பதிவு செய்து பீ அறிக்கையை அடிப்படையாக கொண்டு தன்னை விளக்கமறியலில் வைத்ததாக அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் குறிப்பிட்டார். நான்கு மாதங்கள் விளக்கமறியலில் இருந்த தனக்கு கடும் பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியி;ல் அரசியல் ரீதியான தான் பழிவாங்கல்களுக்குட்படுத்தப்பட்டமையினால் அவர் நாட்டைவிட்டு வெளியேறியதாக மேலும்; தெரிவித்தார்.