பிரேசிலில் சீனா தடுப்பூசி சோதனை மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக குறித்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை இடைநிறுத்தப்பட்டுள்ளது. சீனாவில் சைனோவேக் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ‘கொரோனாவேக்’ தடுப்பூசியின் பரிசீலனை பிரேசிலின் 7 மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்டது. 60 இலட்சம் டோஸ்களை இறக்குமதி செய்வதற்கும் பிரேசிலின் சுகாதார கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி வழங்கியது. எனினும் ‘கொரோனாவேக்’ தடுப்பூசி மனிதர்களிடையே பரிசீலிக்கும்போது மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக தடுப்பூசி பரிசோதனையை இடைநிறுத்த பிரேசில் சுகாதார கட்டுப்பாட்டு நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. குறித்த தடுப்பூசி செலுத்தப்பட்ட நபரொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவரது இறப்புக்கு தடுப்பூசிதான் காரணமாக அமைந்ததா என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையிலேயே தடுப்பூசி பரிசோதனை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரேசில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.