யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானை பகுதியில் ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியிலுள்ள ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மித்ததாக உள்ள குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஐம்பொன் சிலைகள் நேற்று மாலை குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
சுமார் 68 வருடங்கள் பழமைவாய்ந்த முருகன், 3 மயில்கள், கலசம் ஆகிய ஐம்பொன் சிலைகளே இவ்வாறு குறித்த இடத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இவற்றின் பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீட்கப்பட்ட சிலைகள் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. சிலைகளை இந்தியாவுக்கு கடத்தும் நோக்குடன் குளத்தில் புதைத்து வைத்திருக்கலாமென பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.