நாட்டில் வளி மாசடையும் மட்டம் அசாதாரணமாக அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின், காற்றின் தர அளவீட்டு மையம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் வளி மாசு அதிகரித்துள்ளது. கடந்த 27ம் திகதி முதல் குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்திய துணை கண்டத்தின் மேல் வானின் வளி மாசானது, இலங்கை வளிமண்டலத்திற்குள் நுழைவதன் காரணமாக வளியில் மாசு அதிகரித்துள்ளது. இது முன்னைய அளவைவிட இரு மடங்காகுமென தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் காற்றின் தர அளவீட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்வரும் நாட்களில் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும். தங்களது உடல்நிலை தொடர்பில் கூடுதல் அக்கறையுடன் செயற்படவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாகும். தற்போதைய சூழ்நிலையில் வெளியில் சென்று விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதை தற்காலிகமாக தவிர்த்துக்கொள்ளுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் காற்றின் தர அளவீட்டு மையம் அறிவித்துள்ளது.