இலங்கையின் அபிவிருத்திக்கு உதவி வழங்க தயார் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார். இங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி வெளிநாட்டு உறவுகளின் போது நாட்டின் சுயாதீன தன்மை மற்றும் இறமைக்கு முன்னுரிமை வழங்கப்படுமென தெரிவித்தார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ நேற்றிரவு நாட்டிற்கு வருகை தந்தார். அவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இரு தரப்பிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பு மற்றும் வலயத்தின் முக்கிய பல விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. பொருளாதார அபிவிருத்தி இலக்கை பூரணப்படுத்த இலங்கையுடன் தொடர்ச்சியாக ஒத்துழைப்புடன் செயற்பட தயார் என மைக்பொம்பியோ இதன்போது தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதும் காணப்படுகின்ற சக்திமிக்க இரு தரப்பு உறவுகளை மேலும் அதிகரிப்பதே தமது நாட்டின் நோக்கமெனவும் பொம்பியோ தெரிவித்தார். இலங்கைக்குள் அமெரிக்க முதலீடு மேம்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுமெனவும் அவர் உறுதியளித்தார். சுற்றுலாத்துறையானது வேலை வாய்ப்பு மற்றும் அந்நிய செலாவணி உள்ளிட்ட விடயங்களுக்கு வாய்ப்பளிக்கும் பிரதான துறையாகும். சிறந்த திட்டமிடல் ஊடாக அதன் அபிவிருத்திக்கு கைகொடுக்க தயார் என ராஜாங்க செயலாளர் இங்கு தெரிவித்தார்.
இலங்கை தேவைக்கு மேலதிகமாக கடன் பெறாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்ந்து உயர்ந்த மட்ட பொருளாதார மேம்பாட்டை கையகப்படுத்துவதே நோக்கமென ஜனாதிபதி இங்கு தெரிவித்தார். வெளிநாட்டு முதலீடுகளுக்கு தடையாகவுள்ள முதலாளித்துவ கொள்கைகளை மாற்றும் செயற்பாடுகள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை உயர்மட்ட விவசாய அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடிய வளங்கள் உள்ள நாடாகும்.
எமது விவசாயத்துறை நவீனமயப்படுத்தபட வேண்டும். இதற்கென விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் தேவை. இதற்கு உதவியளிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். இலங்கையின் வெளிநாட்டு கொள்கையை தெளிவுபடுத்தி ஜனாதிபதி அது எல்லோருக்கும் சமமான வாய்ப்பை கொண்டுதாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கை ஏனைய நாடுகளுடன் கொண்டுள்ள உறவு சில விடயங்களை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கப்படுகிறது.
வரலாற்று மற்றும் கலாசார தொடர்பு அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை இதில் முன்னுரிமை பெறுகின்றன. சர்வதேச தொடர்புகளின் போது நாட்டின் சுயாதீன தன்மை , இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு இல்லாது போக ஒருபோதும் தாம் தயார் இல்லையென ஜனாதிபதி தெரிவித்தார். பிரிவினை வாத யுத்தத்;தை நிறைவு செய்ததன் பின்னர் நாட்டின் அடிப்படை வசதிகள் அபிவிருத்திக்கு சீனா உதவியதாக தெரிவித்த ஜனாதிபதி அதன் பிரதிபலனாக இலங்கை கடன் வலையில் சிக்கவில்லையெனவும் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் நீண்டகாலமாக காணப்படும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் சக்திமிக்கதாக்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது. இலங்கை இராணுவ வீரர்களுக்கு அமெரிக்காவின் ஊடாக கிடைக்கும் பயிற்சி வாய்ப்புக்கள் மற்றும் பொருள் ரீதியான உதவிகளும் இதில் அடங்கும். போதைப்பொருள் வர்த்தக ஒழிப்பிற்காக கரையோர பாதுகாப்பு சேவையினை பலப்படுத்துவதற்கான தேவையினை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். இதற்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்காவுக்கு முடியுமென பொம்பியோ தெரிவித்தார். இந்து சமுத்திர வலயத்தை அமைதி வலயமாக காண அமெரிக்கா எதிர்பார்க்கிறது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான நட்பு ரீதியிலான உறவு குறித்து ராஜாங்க செயலாளர் இங்கு தமது மகிழ்ச்சியை வெளியிட்டார்.
இந்து சமுத்திரத்தில் வலயத்தில் அமைதி நிலவுவதைக் காண்பதே இலங்கையினதும் நோக்கமென ஜனாதிபதி இங்க தெரிவித்தார். சர்வதேச அரங்கில் மனித உரிமைகள் தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்பட இரு நாடுகளுக்கும் இடையில் இங்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது. இரு நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரும் இச்சந்திப்பில் இணைந்திருந்தனர். இதேவேளை அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வெளிவிவகார அமைச்சில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதன்பின்னர் அமெரிக்க ராஜாங்க செயலாளரின் ஒத்துழைப்புடன் ஊடக சந்திப்பொன்றும் இடம்பெற்றது.