கம்பஹா மாவட்டத்தின் 18 பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படுமென பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது. 40 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் இன்றைய தினம் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளில் வாழும் மக்கள் சுகாதார துறையினரின் வழிகாட்டல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை பேணுதல், முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்ற விடயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தேவையின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதை தவிர்க்குமாறும் பொலிஸ் ஊடக பேச்சார் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.