வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுப்பதற்காக தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்காக தெரிவுக்குழு ஒன்றை நியமிக்கவும் உத்தேசித்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் மூலோபாய திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடலின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2020 – 2024ம் ஆண்டிற்கான தேர்தல் ஆணைக்குழுவின் மூலோபாய திட்டமிடலுக்கமைய தேர்தல் சட்டதிருத்தத்தை மேற்கொள்ளுவது அவசியமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பரிய தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான வைப்புத்தொகையில் திருத்தங்களை மேற்கொள்ளல் தேர்தல் நடைப்பெறும் தினத்தில் வாக்களிக்க முடியாத நபர்களுக்கு அதற்கு முன்னதாக ஒரு தினத்தில் வாக்களிக்க வாய்ப்பளித்தல், 18 வயது பூர்த்தியானவர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுக்கும் வகையில் வாக்காளர் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தல். தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தல். வாக்களிப்பு நிலையங்களில் விசேட தேவையுடையோருக்கான வசதிகளை ஏற்படுத்துதல். விசேட திட்டத்தின் கீழ் இணைய வாக்களிப்பு முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கமளித்தனர்.