கொவிட் – 19 வைரஸ் உயிரற்ற பொருட்களில் நீண்டநாட்கள் உயிர்வாழ்வதை ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். நாணயத்தாள்கள், கையடக்கத்தொலைபேசியின் திரை, துருப்பிடிக்காத இரும்பு கம்பிகள் போன்றவற்றில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை உயிருடன் இருக்குமென கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆய்வில் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். சார்ஸ் வைரஸை விடவும், கொரோனா வைரஸ் நீண்டநாட்கள் ஜடப்பொருட்களில் தங்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எனினும் குறித்த பொருட்கள் மீது புற ஊதா கதிர்கள் விழும் பட்சத்தில் வைரஸ் அழிவடையும் நிலையும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருள் நிறைந்த பகுதிகளிலேயே ஜடப்பொருட்கள் மீது கொரோனா வைரஸ் நீண்டநாட்கள் உயிர்வாழும் தன்மை கொண்டது.
இந்நிலையில் மனிதர்களுக்கிடையில் கொவிட் – 19 வைரஸ் இருமல், தடிமன் மற்றும் உரையாடல் என்பவற்றினூடாக விரைவில் பரவுகின்றது. இந்நிலையில் பொருட்கள் மீது வைரஸ் இருக்கும் பட்சத்தில் அதனை தொடும் ஒருவருக்கும் நோய்தொற்று இலகுவில் பரவும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.