நேற்று இனங்காணப்பட்ட 207 கொரோனா தொற்றாளர்களில் 200 பேர் மினுவன்கொட கொவிட் கொத்தனியை சேர்ந்தவர்கள். எஞ்சிய ஐவரும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள். நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் வைத்தியசாலை தொகுதிகள் தயாரில் உள்ளதாக குறித்த பிரிவுகள் வலியுறுத்தியுள்ளன. அத்துடன் ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று காலை வரை மினுவன்கொட கொவிட் கொத்தனியின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1034 ஆகும். நாட்டில் இதுவரை இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4459ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 1172 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் 201 நோயாளர்கள் வைத்திய கண்காணிப்பின் கீழுள்ளனர். குணமடைந்த மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3274 ஆகும். நேற்றைய தினத்தில் 1280 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள் இன்று கிடைக்கவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. தொற்றாளர்கள் அதிகரித்த போதிலும் அவர்களுக்கு சிகிச்சைகளை மேற்கொள்ள வைத்தியசாலை தொகுதிகள் தயார் நிலையில் இருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது யக்கல பகுதியில் பெண் ஒருவர் சுகயீனமுற்றதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையையடுத்து உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் அவரது இறுதி கிரியைகள் தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்களுக்கு அமைய நேற்றிரவு இடம்பெற்றன.
இதேவேளை சினிமா அரங்குகள், சமூக களியாட்ட மண்டபங்களை மூடிவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.
கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் அதனை தீவிரப்படுத்த பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய நேற்றைய தினம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 79 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதுவரை இனங்காணப்பட்டுள்ள புதிய கொரோனா கொத்தனி காரணமாக ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைகள் உள்ளிட்ட சேவைகள் இடைநிறுத்தப்படவில்லை. எனினும் வைத்தியசாலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது. தூர இடங்களில் இருந்து இவ்வைத்தியசாலைக்கு வருகை தருவதில் இருந்து தவிர்ந்துக் கொண்டு அண்மையில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று பிணி ஆய்வு அட்டையை காண்பித்து சிகிச்சைகளை பெற முடியும். சகல பிரதான வைத்தியசாலைகளிலும் சிறுவர் நோய் வைத்திய நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் பரிந்துரை செய்தால் மாத்திரம் சிகிச்கைக்காக சிறுவர் வைத்தியசாலைக்கு வருகை தருமாறு அதன் பணிப்பாளர் டொக்டர் ஜி.விஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார். சிறுவர் வைத்தியசாலையின் பிணி ஆய்வுக்காக வருகை தருபவர்கள் அவ்வாறு வருகை தர முன்னர் 1390 எனும் இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளியுறவு அமைச்சின் கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள கொன்சியூலர் பிரிவு இன்றும் நாளையும் பொதுமக்களுக்கு என திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.