சட்டம் மற்றும் ஒழுங்கிற்கான அமைச்சராக தான் செயற்பட்ட கால கட்டத்தில் தேசிய பாதுகாப்பு சபையில் சஹ்ரான் ஹாசிம் குறித்து பேசப்படவில்லையென முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க முதற்தடவையாகவே வருகைதந்தார்.
2015 ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அதுவரை ஒரு அமைச்சின் கீழ் இருந்த பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகிய பொறுப்புக்கள் இரு அமைச்சுக்களின் கீழ் பிரிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் இங்கு தெரிவித்தார். இதற்கு அமைய பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் கீழும் ,சட்டம் ஒழுங்கு குறித்த அமைச்சு பிரிதொரு அமைச்சரின் கீழும் முன்னெடுத்து செல்லப்பட்டதாக முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார். இதன்போது அரச சிரேஸ்ட சட்டத்தரணி நீங்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த அமைச்சராக இருந்த காலகட்டத்திற்குள் இராணுவ புலனாய்வு பிரிவினாலும், அரச புலனாய்வு சேவையினாலும் உங்களுக்கு அறிக்கைகள் வழங்கப்பட்டதா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சாகல ரத்நாயக்க அரசபுலனாய்வு சேவை தகவல்களை பாதுகாப்பு செயலாளருக்கே அறிவித்ததாக குறிப்பிட்டார்.
எனினும் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான முக்கிய விடயங்கள் அடங்கிய அறிக்கைகள் எனக்கு அனுப்பப்படுகின்றன. எனக்கு இதுபோன்ற 407 அறிக்கைகள் கிடைத்துள்ளன. இராணுவ புலனாய்வு பிரிவானது தனக்கு எவ்வித அறிக்கைகளையும் முன்வைக்கவில்லை. என மேலும் பதிலளித்தார். தேசிய பாதுகாப்பு ஆராச்சி நிறுவனம் என்ற நிறுவனத்தின் ஊடாக புலனாய்வு தகவல்கள் ஆராயப்பட்டு முன்வைக்கப்படுகிறதா என்பதை நீங்கள் அறிந்து வைத்தீர்களா என இதன்போது அரச சிரேஸ்ட சட்டத்தரணி கேள்வி எழுப்பினார். தான் இத்தருணம் வரை அது தொடர்பான நிறுவனமொன்று குறித்தோ அல்லது அவ்வாறான செயற்பாடுகள் குறித்தோ அறிந்திருக்கிவில்லையென சாகல ரத்நாயக்க பதிலளித்தார். நீங்கள் புலனாய்வு இணைப்பு குழு கூட்டத்தில் எத்தனை தடவைகள் கலந்துகொண்டுள்ளீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு தான் கலந்துகொண்ட இணைப்பு குழு கூட்டத்தின் எண்ணிக்கை குறித்து உறுதியாக கூறமுடியாதென தெரிவித்தார்.
எனினும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு சுமார் 9 தடவைகள் அழைப்பு கிடைத்துள்ளவுடன் இதில் கூடுதலான கூட்டங்களில் கலந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார். நீங்கள் கலந்துகொண்ட தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களில் சஹ்ரான் ஹாசிம் குறித்து பேசப்படவில்லையா என சிரேஸ்ட சட்டத்தரணி எழுப்பிய கேள்விக்கு இல்லை, அதுகுறித்து எதுவும் ஞாபகத்தில் இல்லை. அவ்வாறு பேசப்பட்டிருந்தால், எடுத்த நடவடிக்கைகள் குறித்து நான் கண்டறிவேன், சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டதா என குறித்தும் கண்டறிவேன் என சாகல ரத்நாயக்க பதில் வழங்கினார்.
இந்த தேசிய பாதுபாப்பு சபை கூட்டங்களில் சஹ்ரானை கைதுசெய்யுமாறு அப்போதய ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தாரா என கேட்டபோது இல்லை. எந்தவொரு சந்தர்ப்பத்த்pலும் இல்லையென சாகல ரத்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பதிலளித்தார்.