கொவிட் -19 வைரஸ் தொற்று ஏற்பட்டு 24 மணித்தியாலங்கள் செல்வதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட 3 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சோர்வுடன் காணப்படுவதோடு சுவாசிப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதாக அவரது ஆலோசகரை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்களை செய்திகளை வெளியிட்டுள்ளன. அதன்காரணமாகவே ட்ரம்ப் வொசிங்டனிலுள்ள வோல்டர் ரீட் தேசிய இராணுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி முகக் கவசம் அணிந்த நிலையில் வெள்ளை மாளிகையிலிருந்து ஹெலிக்கெப்டருக்கு செல்லும் காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
வெள்ளை மாளிகை தகவல்களுக்கு அமைய டொனால்ட் ட்ரம்ப் வைத்தியசாலையில்; இருந்துகொண்டு தனது கடமைகளை முன்னெடுப்பார் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதியின் பாரியாரான மிலானியா ட்ரம்ப் ஓரளவு நலத்துடன் காணப்படுவதாகவும் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லையெனவும் பரிசோதனைகளிலிருந்து தெரியவருகிறது.