ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக வெளிநாட்டு புலனாய்வு துறையினர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு மேலதிகமாக தாக்குதல் தொடர்பாக வேறு எந்தவொரு உறுதிப்படுத்தப்பட்ட தகவலையும் வழங்க இலங்கை புலனாய்வு துறையினர் தவறிவிட்டதாக முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார். இதேநேரம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவும் சாட்சியமளித்தார்.
புலனாய்வு தகவல் ஒன்றை வெளியிடும் போது அத்தகவல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விடயங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டியிருந்த போதிலும் இலங்கை அரச புலனாய்வு துறை வழங்கிய அறிக்கைகள் எந்தவித உறுதிப்படுத்தல்களும் அடங்கவில்லையென தெரிவித்தார். முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று ஐந்தாவது நாளாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.
அரச மேலதிக சொலிசிட்ட ஜெனரல் அங்கு விளக்கமளிக்கையில் ஒரு இரவில் விடிய போவதில்லையென்ற ஒரு கூற்று இருப்பதாகவும் அதேபோல் ஈஸ்டர் தாக்குதல் ஒரு இரவில் திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கை அல்லவென தெரிவித்தார். சஹ்ரான் உள்ளிட்ட குழு தீவிரவாத போக்கில் செயற்பட்ட போதிலும் இவ்வாறானதொரு தாக்குதலை மேற்கொள்வதற்கு அவர்கள் எந்த சந்தர்ப்பத்தில் திட்டம் தீட்டினார்கள் என்பதை சரியாக கூற முடியாது என்றும், தாக்குதலுக்கு பின்னர் சஹ்ரான் பற்றிய தனிப்பட்ட விடயம் ஒன்றை என்னால் அறிய முடிந்ததாகவும் மற்றொரு குழந்தையை எதிர்பார்த்து மருத்துவர் ஒருவரை சந்தித்துள்ளதாகவும் தெரியவந்தது. அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் இருந்தால் அவரது மனோநிலையில் இதுபோன்ற அழிவினை மேற்கொள்வதற்கான ஒரு நிலைப்பாடு எந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்டது என்பது பற்றி யூகிக்க முடியாதுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறானதொரு தாக்குதல் தொடர்பாக வெளிநாட்டு புலனாய்வு துறையினரின் முன் அறிவித்தல்களை உறுதிப்படுத்துவதற்கு கூட உள்ளுர் அரச புலனாய்வு தரப்பினரால் முடியவில்லை. தாக்குதல் இடம்பெறும் வரை எந்தவொரு தகவலையும் அரச புலனாய்வு துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லையென்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் அங்கு தெரிவித்தார். அரச மேலதிக சொலிசிட்ட ஜெனரல் கேள்வியெழுப்புகையில் சஹ்ரான் உள்ளிட்டோர் இவ்வாறான ஒரு தாக்குதலை நடத்த காரணம் ஐ.எஸ் அமைப்பின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டதனால் தானா என வினவினார். அதற்கு பதில் அளித்த முன்னாள் பொலிஸ் மாஅதிபர், எவருடைய உள்ளங்களில் இருப்பதை என்னால் கூற முடியாது.
அவர்கள் ஐ.எஸ் கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருக்கலாம். அத்தோடு இத்தாக்குதல் வேறு எவருடைய தேவைக்காகவேனும் நடத்தியும் இருக்கலாம். என்னால் ஒரு விடயத்தை மாத்திரம் கூற முடியும். இச்சம்பவத்துக்கு பின்னர் ஏற்பட்ட சோகமாக நிலைக்கு உட்பட்ட இருவருள் ஒருவர் என்ற வகையில் இச்சம்பவம் தொடர்பாக ஆழமாக கண்டறிய வேண்டுமென தெரிவித்தார். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கேள்வியெழுப்புகையில் இலங்கை அரச புலனாய்வு சேவை இஸ்ரேல், பலஸ்தீன் ஆகிpய நாடுகளில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்து உங்களை அறிவுறுத்தியது. எனினும் ஏப்ரல் 21 குண்டு தாக்குதல் இடம்பெறும் வரை வெளிநாட்டு புலனாய்வு தகவல்களுக்கு மேலதிகமாக அரச புலனாய்வு சேவை தம்முடையது என எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லையென்று நீங்கள் கூறுகின்றார்களா என வினவினார்.
அதற்கு பதில் அளித்த பூஜித் ஜயசுந்தர ஆம் என்றும், வெளிநாட்டு புலனாய்வு தகவல்களுக்கு மேலதிகமாக எமது அரச புலனாய்வு சேவை தாக்குதல் தொடர்பான எந்தவொரு தகவல்களையும் உறுதிப்படுத்திக் கொள்ளவில்லையென தெரிவித்தார். ஏப்ரல் நான்காம் திகதி வெளிநாட்டு புலனாய்வு தரப்பினர் முன் அறிவித்தல் வழங்காவிடின் அரச புலனாய்வு சேவை அறியாமலேயே ஏப்ரல் 21 குண்டு தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என நீங்கள் நினைக்கின்றீர்களா என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி வினவினார். அதற்கு பதில் அளித்த, பூஜித் ஜயசுந்தர, அப்படியும் இருக்கலாம். அரச புலனாய்வு சேவை வெளிநாட்டு புலனாய்வு தகவல்களை எமக்கு வழங்கியதன்றி வேறு எதனையும் செய்யவில்லை.
அரச புலனாய்வு சேவை வேறு நோக்கத்தில் செயற்பட்டுள்ளது. அதுபற்றி கண்டறிய எனக்கு எந்த அதிகாரமும் இருக்கவில்லை. நாட்டின் முன்னணி புலனாய்வு துறையாக இருந்த போதிலும் அரச புலனாய்வு சேவை வேறு நாடுகளில் இடம்பெறும் சம்பவங்களுடன் இங்கும் நடைப்பெறலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்ததையே செய்துள்ளது என தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ அதன் பின்னர் ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார். அரசாங்க மேலதிக சொலிசிட்ட ஜெனரல் கேள்வியெழுப்புகையில், ஜனாதிபதி வெளிநாடு செல்லும் போது அவரோடு உங்களுக்கு நேரடியாக தொடர்புக் கொள்ள வாய்ப்பிருந்ததா என வினவினார். இல்லை, நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போதிலும் எனக்கு அவ்வாறானதொரு வாய்ப்பிருக்கவில்லை. நான் பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவோ அல்லது ஜனாதிபதி செயலகம் ஊடாகவோ மாத்திரமே ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டேன். மேலதிக சொலிசிட்ட ஜெனரல் கேள்வியெழுப்புகையில், புலனாய்வு துறையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஏப்ரல் 18ம் திகதி உங்களோடு தொடர்பு கொண்டு தாலங்குடா வெடிச்சம்பவம் சஹ்ரானின் ட்ரை ரன் ஒன்று என தெரிவித்தாரா, அதற்கு ஹேமசிறி பெர்னாண்டோ பதில் அளிக்கையில் காத்தான்குடியில் வெடிச்சம்வம் இடம்பெற்றுள்ளது என கூறியது நினைவுள்ளது, அது சஹ்ரானின் ட்ரை ரன் என கூறியது பற்றி எனக்கு நினைவில்லையென கூறினார். பின்னர் ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி தாக்குதல் இடம்பெறலாம் என ஏப்ரல் 19ம் திகதி உங்களை உறுதியாக அறிவுறுத்தியிருந்தால் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என ஹேமசிறி பெர்ணான்டோவிடம் வினவினார். அன்றைய தினம் அது எனக்கு உறுதியாக கூறப்படவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் கூறியிருந்தால், இதுவொரு பிரச்சினையென கூறி அனைத்து வேலைகளையும் கைவிட்டு இதில் இறங்கியிருப்பேன், எப்படியேனும் ஜனாதிபதியுடன் பேசியிருப்பேன். இதனை பிரதமரிடம் கூறவா என நான் கேட்பேன்.
அதற்கு அவர் வேண்டாம் என்ற பதிலை அவர் கூறுவார் என்பது எனக்கு தெரியும். பின்னர் இதனை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் கூறவா என கேட்பேன். அதற்கும் அவர் வேண்டாம் என்று கூறுவார் என்பது எனக்கு தெரியும். அதன் பின்னர் செய்யக்கூடிய ஒரே விடயம் முப்படையினரும் பொலிசாரையும் அறிவுறுத்துவதாகும்;. அவர்களை நான் அறிவுறுத்தினேன். தலைமை நீpதிபதி கேள்வியெழுப்புகையில் அவ்வாறு இருந்தால் ஏப்ரல் 20ம் திகதி தகவல் கிடைத்தால் நாளை அல்லது அதற்கு முன்னர் தாக்குதல் நடத்துவதாக கூறி நீங்கள் கூறிய அந்த விடயத்தை ஏன் பின்பற்றவில்லை என வினவினார். அதற்கு பதில் அளித்த ஹேமசிறி பெர்ணான்டோ தாக்குதலின் அளவை எந்தளவு தூரம் தடுக்க முடியுமென்பது குறித்து பிரச்சினை ஏற்பட்டது. சஹ்ரான் உள்ள்pட்டோர் 3 தினங்களுக்கு முன்னரே கொழும்புக்கு வந்திருந்தனர்.
எனினும் ஏப்ரல் 20ம் திகதி நிலந்த என்னை அறிவுறுத்தியிருந்தால், ஜனாதிபதியிடம் நான் அதனை கூறியிருப்பேன். பின்னர் தலைமை நீதிபதி தொடர்ந்தும் கேள்வியெழுப்புகையில், அதுவா உண்மையான காரணம்? அல்லது வெளிநாட்டு ஊடகவியலாளரிடம் கூறியது போன்று, தாக்குதல் இடம்பெறுவது அறிந்திருந்ததாகவும் இந்தளவு பாரிய அளவில் அது இடம்பெறலாம் என நினைக்கவில்லையென கூறியதா உண்மை என வினவினார். அப்போது புன்னகைத்துக் கொண்டு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கருத்து வெளியிட்டார். தான் இதற்கு முன்னரும் இது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளதாக தெரிவித்தார். ஆயத்தமாக இருக்கவில்லையென்பதையா கூறுகின்றீர்கள் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் கேட்ட போது சிரித்துக் கொண்டே அவர் அமைதியாக இருந்தார்.
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆறாவது நாளாகவும் இன்று ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார். 2017ம் ஆண்டு முதல் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட அவரது சீடர்கள் தீவிரவாதத்தை பரப்புவதாக அறிந்து வைத்திருந்த உங்களுக்கு அது எங்கு போய் நிற்கும் என்பதை புரிந்து வைத்திருக்கவில்லையா என எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பூஜித் ஜயசுந்தர, புரிந்துக் கொண்டேன்.
எனினும் அப்போது நாட்டில் இருந்த அரசியல் சூழ்நிலை மற்றும் அரச கொள்கைக்கு ஏற்ப முன்னுரிமையளிக்கப்பட்ட விடயங்கள் அத்தோடு எனக்கு விதிக்கப்பட்டிருந்த வரையறைகள் தொடர்பாகவே தான் பொலிஸ் மாஅதிபராக அவ்விடயங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கினேன். இது தொடர்பாக ஆராயும் பொறுப்பு அரச புலனாய்வு துறைக்கே இருந்தது. அவர்கள் இதுபற்றி அமைச்சரை அறிவுறுத்தியிருக்க வேண்டும்.
எனக்கு விதிக்கப்பட்டிருந்த வரையறைகளுடன் அப்போதைய அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பணிப்புரைகளை வழங்கும் பொறுப்பும் முடிவுகளை எடுக்கும் அதிகாரமும் நாட்டின் தலைவருக்கே இருந்தது என அவர் தெரிவித்தார்.