தேங்காயின் சுற்றளவுக்கமைய நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கு தேங்காயை விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அது தொடர்பில் வர்த்தகர்களை அறிவுறுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கத்தினால் வெறியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கமைய 13 அங்குலத்துக்கு மேலான சுற்றளவை கொண்ட தேங்காய் ஒன்றின் உயர்ந்தபட்ச சில்லரை விலை 70 ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 12 முதல் 13 அங்குல சுற்றளவை கொண்ட தேங்காய் ஒன்றின் விலை 65 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12 அங்குலத்தை விடவும் குறைந்த சுற்றளவை கொண்ட தேங்காய் ஒன்றின் விலை 60 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உயர்ந்தபட்ச சில்லரை விலைக்கு மேலதிகமாக உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் அல்லது வர்த்தகர்கள் எவரும் விற்பனை செய்யவோ, விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.