முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய அரசியல்வாதிகள் பலர் இன்றைய தினம் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர். காலை 10 மணிக்கு ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பமானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கமைய பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள குறித்த அரசியல்வாதிகள் இன்றைய தினம் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், சரத் பொன்சேகா, மலிக் சமரவிக்ரம ஆகியோரும் இன்றைய தினம் சாட்சியம் வழங்கவுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க , ஆர். சம்பந்தன் மற்றும் எம். ஏ சுமந்திரன் ஆகியோரும் இன்றைய தினம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத்தூதுவர் உதயங்க வீரதுங்கவும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். சட்டரீதியாக கொண்டுவரப்படவிருந்த கொள்கலன் ஒன்றை சட்டவிரோதமாக சுங்கப் பிரிவில் தடுத்துவைத்தமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதன் மூலம், தான் அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே , உதயங்க வீரதுங்க ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.