முற்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கென கொழும்பில் அமுல்படுத்தப்பட்டிருந்த வீதி ஒழுங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர். அண்மையில் அமுல்படுத்தப்பட்ட வீதி ஒழுங்குசட்டம் 100 வீதம் வெற்றியளிக்காதமையினால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முற்சக்கர வண்டிகள் என்பன பஸ் முன்னுரிமை பாதையில் பயணிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
எனினும் குறித்த பஸ் முன்னுரிமை பாதைக்கு மேலதிகமாக மற்றுமொரு பாதை முற்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நடைமுறை இன்றுமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விசேட வீதி ஒழுங்குமுறைகள் நாளாந்தம் காலை 6 மணிமுதல், 9 மணிவரையும், மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணிவரை மாத்திரமே அமுலில் உள்ளன. குறித்த காலப்பகுதியை தவிர ஏனைய நேரங்களில் வழமை போன்று வாகனங்கள் பயணிக்க முடியும். இந்நிலையில் வீதி ஒழுங்குமுறையில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை, சோதனை நடவடிக்கையாகவே காணப்படுகிறது. இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தீர்மானம் எடுக்கப்படுமென போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.