இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கான ஒரு வருடகால போட்டித்தடை இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அவர் மீண்டும் பந்துவீச்சு முறை சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன. பந்துவீச்சு முறையானது ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அகில தனஞ்ஜயவிற்கு மீண்டும் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக அவருக்கு போட்டித்தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பந்துவீச்சு முறை சோதனைக்கு பின்னர் அவர் மீளவும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.
இந்நிலையில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் அகில தனஞ்ஜயவின் பந்துவீச்சு முறையில் தவறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் திகதி அகில தனஞ்ஜய மீண்டும் போட்டித்தடைக்கு உள்ளானார். குறித்த தடைக்காலம் இன்றுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.