ஆரோக்கியமான ஒழுக்க நெறிகொண்ட சக்தி மிக்க சமூகம் ஒன்றை கட்டியயெழுப்ப விளையாட்டு கலாசாரம் ஒன்றை உருவாக்குவது காலத்தின் தேவையென ஜனாதிபதி கோட்டாபய ராஜகபக்ஷ தெரிவித்துள்ளார். விளையாட்டு என்பது இளம் சமூகத்தின் மொழியாகும். கல்விக்கு இணையாக பிள்ளைகளை விளையாட்டில் ஈடுபடுத்துவதன் ஊடாக பூரணத்துவமான மனிதனை சமூகத்திற்கு வழங்க முடியும். கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சுக்குளுக்கு அதற்கான பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார். நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் விளையாட்டு துறையில் திறமைகளை வெளிக்காட்டும் மாணவர்களை சிறு வயது முதல் தெரிவு செய்து அவர்களுக்கு தேவையாக போஷாக்கு, தேசிய மற்றும் சர்வதேச பயிற்சிகள் உள்ளட்ட வசதிகளை வழங்கும் வகையிலான நிகழ்ச்சி திட்டங்களின் அவசியம் தொடர்பிலும் இதன் போது தெளிவுப்படுத்தப்பட்டது.
சகல மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளின் விளையாட்டு மைதானங்களை பராமரிப்பதற்கென தனியானதொரு பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கிராமிய ரீதியாக அதிகம் கவரக்கூடிய அந்தந்த மாகாணங்களின் பிரபலமான விளையாட்டுக்களை அடையாளம் கண்டு தகுதியான மற்றும் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.