சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட வழக்கு விசாரணையிலிருந்து மேல் முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் இன்று விலகினார்.
மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி நவாஸ் மற்றும் சோஹித்த ராஜகருணா ஆகியோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தனிப்பட்ட காரணத்திற்காக தான் இவ் வழக்கிலிருந்து விலகிக்கொள்வதாக நீதிபதி நவாஸ் நீதிமன்றத்தில் அறிவித்தார். இதற்கமைய முறைப்பாட்டை விசாரிப்பதற்காக மஹிந்த சமயவர்த்தன மற்றம் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதிபதி குழாம் பெயரிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு குருகந்த ரஜமகாவிகாரையின் விகாராதிபதியின் இறுதிக்கிரியைகள் தொடர்பாக முல்லைத்தீவு மெஜிஸ்ரேட் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை மீறியதன் மூலம் நீதிமன்றத்தை இழிவுபடுத்தியதாக குற்றம் சுமத்தி சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கின் பிரதிவாதிகளான முல்லைத்தீவு பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் முல்லைத்தீவு தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஆகியோரை விடுவிப்பது குறித்த எவ்வித ஆட்சேபணைகளும் இல்லையென முறைப்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்களை இவ்வழக்கு விசாரணையிலிருந்து விடுவிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.