வீதி மருங்கு சட்டத்திற்கு முரணாக செயற்படுகின்ற சாரதிகளுக்கு எதிராக நாளை முதல் சட்டம் அமுல்படுத்தப்படுமென போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பணிப்பாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்காக வீதிமருங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற விதத்தை கண்காணிப்பதற்காக ராஜகிரிய சுற்றுவட்ட பகுதிக்கு இன்று வருகைதந்தபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இதனை தெரிவித்தார்.
2018 ம் ஆண்டில் வெளியிடப்பட்ட புதிய குற்றப்பத்திரிகையில் காணப்படுகின்ற 33யில் வீதி மருங்கு சட்டத்திற்கு அமைய 2000 ரூபா அபராதம் விதிக்க முடியும் இச்சட்டம் குறித்து ஊடகங்கள் மூலம் சுமார் 2 வாரங்களாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திக்க ஹப்புகொட சுட்டிக்காட்டினார்.
கடந்த திங்கள், செவ்வாய் மற்றும் இன்றைய தினமும் வீதி மருங்கு சட்டத்தை பரிசீலிக்கப்பட்டதுடன் ஆயிரத்து 500 பொலிஸ் அதிகாரிகளும் 200 பெண் பொலிஸ் அதிகாரிகளும் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். வாகன நெரிசல்மிக்க இடங்களை அடையாளம் காணுதல் மற்றும் வீதி மருங்கு சட்டத்தை மீறிய சாரதிகளை இனங்காண்பதற்கும் விமானப் படையின் ட்ரோன் கமெராக்கள் பயன்படுத்தப்பட்டன.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர காலி, வீதி , பேஸ்லைன் மற்றும் ஹைலெவல் வீதி என்பன தேர்ந்தெடுக்கப்பட்டு வீதிமருங்கு சட்டத்தின் கீழ் வாகனங்களை செலுத்த இம்மூன்று தினங்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டன. இவ்வேலைத்திட்டம் ஊடாக எதிர்பார்க்கப்பட்டவாறு, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் இச்சட்டத்தை உரிய முறையில் பின்பற்றவில்லையெனவும் ஹப்புகொட தெரிவித்துள்ளார். பஸ் வண்டிகள் பயணிக்கின்ற மருங்கில் மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டிகளும் பயணிக்க வேண்டியுள்ளதுடன் பஸ் வண்டி தரிப்பிடத்தில் பொலிஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டு பஸ்வண்டிகள் நிறுத்தப்படும் விதமும் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பயணிக்கின்ற விதமும் பரிசோதிக்க்ப்பட்டன.
இவ்வேலைத்திட்டத்திற்கு இராணுவத்தின் உதவியும் இன்றைய தினம் கிடைத்தது. எதிர்காலத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து வீதிகளை அபிவிருத்தி செய்யும் போது முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்தியேக மருங்கொன்றை ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.