சட்டவிரோதமாக துப்பாக்கிகளை பயன்படுத்துவோர் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படவுள்ளது. 10 ஆயிரம் முதல் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை சன்மானம் வழங்கப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்;ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த விடயம் தெளிவுப்படுத்தப்பட்டது.
கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் 31ம் திகதி வரை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள் மற்றும் வாள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டன. நாட்டில் சட்டவிரோத துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளது. அவை தொடர்பில் தகவல் கிடைக்குமாயின் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.