நியூ டயமண்ட் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் நூற்றுக்கு 99 வீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. எனினும் கப்பலின் எஞ்சின் பகுதியிலுள்ள சிவப்பு நிற இரும்புகளினால் மீண்டும் தீ ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக விமானப்படை ஊடகப்பேச்சாளர் க்ரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார். கப்பலை கண்காணிக்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
தேவையேற்படும் பட்சத்தில் தீயணைப்பு பணிகளுக்கென எம்.ஐ.17 மற்றும் பெல் 212 ரக விமானங்கள் அம்பாறையிலுள்ள விமானப்படையின் முகாமில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மாலை கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய கப்பலின் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்தது. கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட முதற்கட்ட பணிகள் வெற்றியளித்துள்ளதாக விமானப்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை விமானப்படையினரால் கப்பலில் மீண்டும் தீ பரவாமல் இருப்பதை தடுக்கும் வகையில் முதற்தடவையாக இரசாயன மூலப்பொருள் அடங்கிய பொதிகள் கப்பலின் எஞ்சின் இருக்கும் பகுதியில் போடப்பட்டன. சுமார் 500 கிலோ கிராம் இரசாயன பொருள் இரு கட்டங்களாக விமானத்திலிருந்து கப்பலில் போடப்பட்டன. இதிலிருந்து வெளியாகும் ஒக்சிஜன் எஞ்சினை குளிரூட்டும் பணியை மேற்கொள்ளும். துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கமைய முதற்தடவையாக இதுபோன்றதொரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை நியூ டயமண்ட் கப்பலானது கரையோரத்திலிருந்து, 29 கடல்மைல் தூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்றிரவு கப்பல் இருக்கும் பகுதியில் நிலவிய அசாதாரண வானிலை காரணமாக கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச்செல்லும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. எனினும் இன்று காலை முதல் கிழக்கு கடற்பகுதியில் சீரான வானிலை நிலவியதால் மீண்டும் குறித்த பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து வருகைத்தந்துள்ள துறைசார் நிபுணர்களை கப்பல் இருக்கும் பகுதிக்கு அழைத்துச்செல்லும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. கப்பல் குறித்து எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் குறித்த குழுவினர் ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிக்கவுள்ளனர். அவர்கள் பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேரந்தவர்களென கடற்படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அபாயநிலையயை கடந்ததன் பின்னர் நியூ டயமண்ட் கப்பலை இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பிலிருந்து நீக்குவதற்கு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொதுமுகாமையாளர் டேர்னி பிரதீப்குமார தெரிவித்துள்ளார். கப்பலில் ஏற்பட்ட தீ நூறு வீதம் கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னர் இது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
இதனிடையே கப்பல் இருக்கும் பகுதியில் சமுத்திரத்தின் சுற்றாடல் நிலை குறித்து சோதனை செய்வதற்கு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பல்கலைக்கழக நிபுணர்களின் ஒத்துழைப்பும் பெறப்படவுள்ளது. நாளைய தினத்திற்குள் கப்பலில் ஏற்பட்ட தீயினால் கடற்சூழலுக்கு உருவான பாதிப்பு குறித்து தகவல்கள் வழங்கப்படும். இதற்கமைய நியூ டயமண்ட் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கென செலவிடப்பட்ட நிதியை மீள அறவிடுவது தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெறுமென சமுத்திர பாதுகாப்புஅதிகார சபையின் பொதுமுகாமையாளர் டேர்னி பிரதீப்குமார தெரிவித்துள்ளார்.