ஆழமாக சிந்தித்து வழங்கப்பட்ட நியமனங்களை பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் மாற்றுவதற்கு எவ்வித எண்ணமும் இல்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். இதனால் ஏதேனும் நியமனத்துக்கு எதிராக அதனை மாற்றியமைக்குமாறு தனக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ அழுத்தம் பிரயோகிக்க வேண்டாம் என ஜனாதிபதி சகலரையும் பணிவுடன் கேட்டுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் மேற்கொண்ட ஒருசில நியமனங்களுக்கு எதிராக பல அழுத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன. நாட்டின் இறையாண்மை தேசிய பாதுகாப்பு மற்றும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தை அமுல்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்களை கருத்திற்கொண்டு இந்நியமனங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. நியமிக்கப்பட்டவர்களின் தேசிய பற்று தகைமை மற்றும் பின்னணி போன்றன ஆராயப்பட்டு அரசாங்கத்தின் கொள்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தியுளள்ர். இவ்வாறு மிகவும் ஆழமாக சிந்தித்து மேற்கொள்ளப்பட்ட இந்நியமனங்ளை அழுத்தங்களுக்கு மத்தியில் மாற்றப்பட்டு பிரிதொரு நபரை அதில் ஈடுபடுத்துவதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லையெனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
நியமனங்களுக்கு எதிராக கருத்துக்களை முன்வைப்பதன் மூலம் குறித்த நபருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற முடியாது போவது மாத்திரமன்றி, சமூகத்தில் அந்நபர்கள் குறை மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுவதன் மூலம் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்கள் பலவீனமடையும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.