காலி மாவட்டத்தின் எல்பிட்டி , பத்தேகம , நாகொட மற்றும் களுத்துறை மாவட்டத்தின் பாலிந்த நுவர போன்ற பகுதிகளுக்கு தொடர்ந்தும் மண் சரிவு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். நாட்டை சூளவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள அமுக்கம் காரணமாக இன்றும் அடுத்துவரும் ஒரு சில நாட்களுக்கும் மழையுடன் கூடிய காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக தாழ் நிலங்கள் நீரில் மூழ்கின. இதனால் போக்குவரத்திற்கும் தடை ஏற்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். நாகொட, எட்டலமத்த, ஊரெல, வந்துரம்ப போன்ற பகுதிகளின் தாழ் நிலங்கள் நீரில் மூழ்கின.
காலி பிட்டிகல, எல்பிட்டிய உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் உள்ள வீதிகள் நீரில் மூழ்கியமையினால் போக்குவரத்து தடைப்பட்டது. நிலவுகின்ற சீரற்ற காலநிலையினால் பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் குறைவு காணப்பட்டதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலையால் கோக்கந்தர பகுதியில் உள்ள வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததனால் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டது.
ஹம்பாந்தோட்ட சிறிபோபுர பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளின் நிலைமை குறித்து கண்காணிப்பதற்காக அமைச்சர் சமல் ராஜபக்ஸ விஜயம் செய்திருந்தார். சேதமடைந்த சொத்துக்களை மீண்டும் புனரமைப்பதற்கு துரித கதியில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார். பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக முதற்கட்ட கொடுப்பனவாக 10 ஆயிரம் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் உபுல்கலப்பத்தி தெரிவித்துள்ளார்.