போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பணியகத்தின் 13 அதிகாரிகளும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டார். முறைப்பாடு தொடர்பான விசாரணை இன்று இடம்பெற்ற நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 13 பேரும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவில்லை.
இதனால் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்தார். குறித்த வழக்கின் 14வது சந்தேக நபராக, தற்போது டுபாயிலுள்ள போதைப்பொருள் வர்த்தகரும், பாதாள குழு தலைவருமான உதார சம்பத் என்பவரை பெயரிடுவதற்கு அனுமதி வழங்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை விடுத்தார்.
குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், உதார சம்பத்தை வழக்கின் 14வது சந்தேக நபராக பெயரிட அனுமதி வழங்கினார். முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, சந்தேக நபர்கள் 13 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். எதிர்வரும் 14ம் திகதி விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் அறிவித்தார். விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்க இன்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.