ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு எழுத்து மூலம் தான் எவ்வித முன் அறிவித்தலையும் வழங்கவில்லையென அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். தாக்குதல் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுபற்றி கண்டறியப்பட்டது.
அரச புலனாய்வு துறை பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, 19வது நாளாகவும் இன்று ஆணைக்குழுவுக்கு வருகை தந்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சார்பில் ஆஜரான சட்டதரணி நிலந்த ஜயவர்தனவிடம் கேள்விகளை தொடுத்தார். வெளிநாட்டு புலனாய்வு துறையினர் முன்னறிவித்தல் வழங்கும் வரை தாக்குதல் தொடர்பான எவ்வித தகவல்களையும் இலங்கை அரச புலனாய்வு துறை அறிந்திருக்கவில்லை. கடந்தாண்டு ஏப்ரல் 9ம் திகதி ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் இடம்பெற்ற புலனாய்வு துறையின் மீளாய்வு கூட்டத்தில் குறித்த சாட்சியங்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சமர்பிக்கப்பட்டது.
இந்த சாட்சியங்களை முன்வைக்கும் போது ஊடகங்களுக்கு அங்கு பிரசன்னமாகியிருக்க வாய்ப்பளிக்கப்படவில்லை. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சார்பில் ஆஜரான சட்டதரணி தில்ஸான் ஜயசூரிய, முன்னாள் அரச புலனாய்வு துறை பணிப்பாளரிடம் குறுக்கு கேள்விகளை வினவினார். அரச புலனாய்வு துறை பணிப்பாளரான நீpங்கள் கடமை ரீதியில் எந்த அதிகாரிக்கு பொறுப்பு கூற வேண்டியிருந்தது என கேட்டார். அதற்கு பதில் அளித்த நிலந்த ஜயவர்தன பாதுகாப்பு செயலாளரின் கீழ் நேரடியாக பணிப்புரிந்தமையினால் தான் பாதுகாப்பு செயலாளருக்கே பொறுப்பு கூற வேண்டியிருந்ததாக தெரிவித்தார். ஹேமசிறி பெர்ணான்டோ பாதுகாப்பு செயலாளராக இருந்த போது அரச புலனாய்வு துறை பணிப்பாளராக ஐந்தரை மாதங்கள் அவருடன் நெருங்கி செயற்பட்டதாகவும் நிலந்த ஜயவர்தன தெரிவித்தார். நாள் ஒன்றுக்கு ஹேமசிறி பெர்ணான்டோவுடன் தொலைபேசியில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் தொடர்பு கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
2019ம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் 20ஆம் திகதி வரை சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது சீடர்கள் தொடர்பாக எந்தவித எழுத்துமூல அறிக்கையும் அரச புலனாய்வு சேவை அப்போதைய பாதுகாப்பு செயலாளருக்கு அனுப்பி வைக்கவில்லையென்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா என சட்டதரணி வினவினார்.
அதற்கு பதில் அளித்த நிலந்த ஜயவர்தன, அதனை தான் ஏற்றுக்கொள்வதாக கூறினார். தாக்குதல் தொடர்பாக ஏப்ரல் நான்காம் திகதி வெளிநாட்டு புலனாய்வு துறையை அறிவுறுத்தி ஐந்தாம் திகதி அதனை எழுத்துமூலம் வழங்கியிருந்த போது ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் இடம்பெறும் வரை பாதுகாப்பு செயலாளருக்கு எவ்வித முன் அறிவித்தலையும் எழுத்துமூலம் வழங்கவில்லையென்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா என சட்டதரணி கடுமையாக வினவினார். தான் எந்தவித முன் அறிவித்தலையும் பாதுகாப்பு செயலாளருக்கு எழுத்துமூலம் சமர்ப்பிக்கவில்லையென்பதை முன்னாள் புலனாய்வு துறை பணிப்பாளர் ஏற்றுக்கொண்டார். தாக்குதல் இடம்பெறும் வரை எழுத்து மூல அறிக்கைகளை சமர்ப்பிக்காத தான் தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு செயலாளருக்கு 3 எழுத்துமூல அறிக்கைகளை சமர்பித்தமையை ஏற்றுக்கொள்கின்றீர்களா என சட்டதரணி வினவினார்.
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் தாம் பாதுகாப்பு செயலாளருக்கு 2 எழுத்துமூல அறிக்கைகளை சமர்பிக்க நடவடிக்கை எடுத்ததாக நிலந்த ஜயவர்தன nதிவித்தார். எனினும் தாக்குதலுக்கு முன்னர் எழுத்து மூலம் அறிவிக்காத போதிலும் ஏப்ரல் 7ம் திகதி தொலைபேசி ஊடாக பாதுகாப்பு செயலாளரை அறிவுறுத்தியமைக்கான சான்றுகள் தன்னிடம் இருப்பதாக நிலந்த ஜயவர்தன ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்தார். மீண்டும் குறுக்கு கேள்விகளை கேட்ட சட்டதரணி ஜயசூரிய, எழுத்துமூலம் அனுப்ப வேண்டுமென நினைக்காத சாட்சியாளர் ஏப்ரல் 7ம் திகதி தொலைபேசியில் அறிவுறுத்தியதாக கூறப்படும் சாட்சியங்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். அந்த குற்றச்சாட்டை தான் ஏற்றுக்கொள்வது இல்லையென முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவு தலைவர் தெரிவித்தார்.
அமைதியான ஒரு நாட்டில் தற்கொலை தாக்குதல் ஒன்று தொடர்பாக தகவல் கிடைத்தன் பின்னர் அதனை தனது உயர் அதிகாரிக்கு ஏன் எழுத்துமூலம் அறிவிக்கவில்லையா என சட்டதரணி கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ஜயவர்தன, புலனாய்வு தகவல்கள் எழுத்துமூலம் அறிவிக்கப்பட வேண்டுமென்ற நியமம் இல்லையென தெரிவித்தார். நாம் பல்வேறு முறைகளில் புலனாய்வு தகவல்களை பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு வழங்குவோம். நாம் தொலைபேசி மூலம் இதனை விட பலவற்றை பேசியிருக்கின்றோம். ஆவணங்கள் தொடர்பாக தர்க்கம் புரிவதற்கு ஏப்ரல் 21ம் திகதிக்கு பின்னரே முற்பட்டதாகவும் ஜயவர்தன தெரிவித்தார். வெளிநாட்டு புலனாய்வு துறை ஒன்றினால் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கும் வரை எமது புலனாய்வு சேவை அது தொடர்பாக எதனையும் அறிந்திருக்கவில்லையா என சட்டதரணி வினவினார்.
வெளிநாட்டு புலனாய்வு தகவல்கள் கிடைக்கும் வரை தாக்குதல் தொடர்பாக தமது புலனாய்வு சேவைக்கு தகவல்கள் கிடைத்திருக்காத போதிலும் 2017ம் ஆண்டு முதல் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தீவிரவாதிகள் தொடர்பாக 347 அறிக்கைகள் அரச புலனாய்வு துறை பொறுப்பு வாயந்தவர்களுக்கு வழங்கியிருந்ததாக முன்னாள் பணிப்பாளர் தெரிவித்தார். நாம் தூர நோக்குடனேயே பணியாற்றினோம். 2018ம் ஆண்டு முதல் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறும் என அறிந்து வைத்திருந்தோம். விசேட பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி அவர்களை கைது செய்யுமாறு இதன் காரணமாகவே கூறினோம். 2017ம் ஆண்டு நாம் கூறியதை போன்று சஹ்ரான் உள்ளிட்ட சீடர்களை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்த நிலைக்கு சென்றிருக்காது என்றும் நிலந்த ஜயவர்தன தெரிவித்தார்.
பின்னர் சட்டதரணி கேள்வியெழுப்புகையில் நீங்கள் கூறும் வகையில் தேசிய பாதுகாப்பு பேரவையை தொடர்ந்தும் அறிவுறுத்திய போதிலும் தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் ஏனைய அதிகாரிகளை விட ஜனாதிபதி பொறுப்புகூற வேண்டுமல்லவா என வினவினார். அதற்கு பதில் அளித்த நிலந்த ஜயவர்தன, தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் என்ற வகையில் அது தொடர்பாக ஜனாதிபதிக்கு கூடுதலான பொறுப்பு இருப்பதாக தெரிவித்தார்.
இதேநேரம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கண்டறியும் விசேட பொலிஸ் விசாரணை பிரிவு மூலம் பல சாட்சியாளர்களுக்கு தமது விசாரணை பிரிவுக்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி, அகில விராஜ் காரியவசம், ஆஸூ மாரசிங்க, மங்கள சமரவீர மற்றும் பா.உ சிவனேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கும் பொலிஸ் விசாரணை பிரிவுக்கு வருகை தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.