விவசாயத்திணைக்களத்தில் 8 வருடங்களாக நிலவுகின்ற வெற்றிடங்களை துரிதமாக நிரப்பி விவசாயத்துறையின் முன்னேற்றத்திற்காக முறையான வேலைத்திட்டமொன்றை வகுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை விடுத்துள்ளார். கூடிய விவசாய விளைச்சலை பெற்றுக்கொள்வதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி பலயோசனைகளை முன்வைத்தார்.
நெல் மற்றும் தானியங்கள், காபன் உரம், மரக்கறி, பழங்கள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கைகளை மேம்படுத்துதல், விதை தயாரிப்பு மற்றும் உயர் தொழிநுட்ப விவசாய ராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இவ் ஆலோசனையை விடுத்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. பலமான உள்நாட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக விவசாய அறுவடைகளை அதிகரிக்கும் காலம் எழுந்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
கொவிட் காரணமாக வீழ்ச்சியடைந்துவரும் ஏனைய நாடுகளின் பொருளாதாரத்தை கண்காணித்து உள்நாட்டு பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டியுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார். விதை உற்பத்தி , உரப்பயன்பாடு, விவசாய புத்தாக்க ஆய்வுகள் , களஞ்சியம் மற்றும் போக்குவரத்து போன்ற சகல துறைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் சவாலாக கொண்டுள்ள இலக்குகள் பூர்த்தி செய்யப்படவேண்டும். உள்நாட்டில் வருடாந்தம் 80 ஆயிரம் தொன் உருளைக்கிழங்கு அறுவடை பெறப்படுகின்றது. உருளைக்கிழங்குக்கான நுகர்வோரின் தேவை 2 இலட்சத்து 50 ஆயிரம் தொன்களாகும். இதனால் உருளைக்கிழங்கை இறக்குமதி செய்யாது உள்நாட்டிலேயே தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு விவசாயிகள் ஊக்குவிக்கப்படவேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். உயர் தொழிநுட்பத்த்ன் கீழ் விதைகளையும் பயிர்களையும் விவசாயிகளுக்கு விநியோகித்தல் மற்றும் ஏனைய மாதிரி உருளைக்கிழங்கு வகைகளை நுகர்வோர் மத்தியில் பிரபல்யப்படுத்துவதன் மூலமும் உருளைக்கிழங்கு இறக்குமதியை வரையறுக்க முடியுமென பொருளாதார மேம்பாடு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார். அடுத்த ஆண்டில் சோள உற்பத்தியினால் தன்னிறைவடைய முடியமெனவும் அவர் சுட்டிக்காட்டினார். விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, ராஜாங்க அமைச்சர் சசேந்திர ராஜபக்ஸ உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.