ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு அனுப்ப ஆராயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பலர், ரணில் விக்கிரமசிங்கவிடம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளனர். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியடைந்தது. ஒரு ஆசனத்தை கூட கைப்பற்றவில்லை. எனினும் தேசிய பட்டியல் மூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. அதற்கான நபரை பெயரிடுவதில் கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. புதிய பாராளுமன்றத்தின் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையிலும், ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினரின் பெயர், இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் தேசிய பட்டியல் உறுப்பினரை அறிவிக்க, ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிடம் 7 நாள் அவகாசம் கோரியுள்ளார். இவ்வாறான பின்னணியிலேயே கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு அனுப்ப செயற்குழு உறுப்பினர்கள் சிலர் ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர்;.