ஒரே நாடு, ஓரே சட்டம் என்ற ஜனாதிபதியின் கருத்தை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. அரசாங்கம் குறித்த கொள்கையை பின்பற்ற முயற்சித்தால், எதிர்கட்சி என்ற வகையில் ஒத்துழைப்பு வழங்க தயாரென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டார். அதை நடைமுறைப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி ஒத்துழைப்பு வழங்கும். சட்டம் நாட்டிலுள்ள அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குறிப்பிட்டார்.
இலங்கையில் பல கலாசாரங்கள் உள்ளன. சில தனியார் சட்டங்களும் உள்ளன. மலைநாட்டு சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம், தேச வழமை சட்டம் போன்றவை காணப்படுகின்றன. குறித்த சட்டங்கள் நீக்கப்படுமா என ஆளும் தரப்பினர் பதிலளிக்க வேண்டும். குறித்த சட்டங்களை நீக்கி, ஒரே சட்டத்தை உருவாக்க முயற்சித்தால், வரவேற்கத்தக்கது. அதற்கு எதிர்கட்சி ஆதரவளிக்குமென பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குறிப்பிட்டார்.
இதேவேளை ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கொள்கை சாத்தியப்படாத ஒன்று என எதிர்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில், நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் தொடர்பில் ஜனாதிபதி எதையும் குறிப்பிடவில்லையென எதிர்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.