நாடு முழுவதும் ஏற்பட்ட மின்சாரத் தடை தொடர்பில் மூன்று தினங்களுக்குள் ஆரம்ப கட்ட அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு, இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது. நேற்றைய தினம் 12.45 மணி முதல் நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டது. இதனால் பொருளாதார மற்றும் நிறுவனங்களின் நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்ததோடு, மக்களின் அன்றாட நடவடிக்கையும் பாதிக்கப்பட்டது.
இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்திற்கு அமைய, ஒருங்கிணைந்த வகையில், திறனாகவும் சிக்கனமாகவும் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க வேண்டியது அவசியமாகும். அத்துடன், மின்துண்டிப்புக்கான அவசியம் ஏற்படும் போது, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன் அனுமதியுடன் பொதுமக்களுக்கு முன்னறிவிப்புடன் மின்சாரத் துண்டிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்படும் இவ்வாறான மின்சாரத் தடை தொடர்பில், ஆணைக்குழுவிற்கு ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மின்சாரத் தடை மற்றும் இவ்வாறான தடை எதிர்காலத்தில் ஏற்படுவதை தடுப்பதற்கு எடுத்துள்ள விடயங்கள் அடங்கிய முழு அறிக்கையை, எதிர்வரும் செப்டெம்பர் 17ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரம் தொடர்பான பணிப்பாளர் நலின் எதிரிசிங்க கோரியுள்ளார்.