தலைமைத்துவம் குறித்தும் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் தெரிவு குறித்தும் இறுதி தீர்மானமொன்றை பெறுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது. எனினும் எவ்வித தீர்மானங்களுமின்றி கூட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவத்தை இளம் உறுப்பினர் ஒருவருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமைத்துவத்தை எதிர்பார்க்கும் சகலரும் அது தொடர்பில் முன்வரமுடியுமெனவும் தேசிய எதிர்பார்ப்புக்களை அடையாளும் காணும் புதிய இளம் தலைமைத்துவத்தை தெரிவு செய்ய தீர்மானம் பெறப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களின் சந்திப்பு இன்று முற்பகல் ஆரம்பமானது. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஒன்றுகூடிய மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் தேசியப்பட்டியல் உறுப்பினர் தொடர்பில் இறுதி தீர்மானத்தை பெறுவார்கள் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்மானமின்றி நிறைவடைந்து 24 மணித்தியாலங்கள் கடக்காத நிலையில் இன்றையதினம் மற்றுமொரு ஒன்றுகூடல் இடம்பெற்றது.
நீண்டகாலமாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக செயற்படும் ரணில் விக்கிரமசிங்க கட்சி தலைமைத்துவத்திலிருந்து விலகுவதற்கு விருப்பம் தெரிவித்ததாக கடந்த 10 ம் திகதி அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டங்களின் போது தலைமைத்துவம் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. புதிய தலைமைத்துவம் குறித்து ரணில் விக்கிரமசிங்க தெளிவாக கருத்துக்களை முன்வைத்ததாக ஐக்கிய தேசியக்கட்சி அறிக்கையொன்றில் வெளியிட்டிருந்தது. ரணில் விக்கிரமசிங்க தலைமைத்துத்திலிருந்து விலக வேண்டுமென ஒரு தரப்பினர் கூறும் நிலையில் மற்றுமொரு தரப்பினர் அவரை பாதுகாக்கும் நிலையை காணக்கூடியதாக உள்ளது.