ஐக்கிய தேசியக்கட்சியினால் இம்முறை பொதுத் தேர்தலில் ஒரு தொகுதியை ஏனும் வெற்றிகொள்ளவோ ஒரு ஆசனத்தையேனும் கைப்பற்றவோ முடியாமல் போயுள்ளது. தேசியப் பட்டியலின் ஊடாக ஒரேயொரு ஆசனம் மாத்திரமே ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் உப தலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோருடன் நவீன் திசாநாயக்க, வஜிர அபேவர்த்தன, தயாகமமே, பாலித்த தெவரப்பெரும, பாலித்த ரங்கே பண்டார உள்ளிட்ட, பிரபலமானவர்கள் தேர்தலில் தோல்வியைத் தழுவினர்.
1977 ம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வி பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் ஐக்கிய தேசிக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ரணில் விக்கிரமசிங் தலைமையில் இன்று பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டிருந்தனர். கட்சியின் எதிர்கால திட்டங்கள் மறு சீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து அதன்போது கலந்துரையாடப்பட்டதாக அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அக்கட்சியின் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதேவேளை இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு அதிகளவான மக்களின் ஆணை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஐக்கிய தேசியகட்சி பாரிய தோல்வியை சந்தித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் அறிக்கையொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளார். பின்னடவை சந்தித்தமை ஏற்பட்ட குறைபாடுகள் என்பவற்றின் பொறுப்பை ஏற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.