லெபனானின் பெய்ரூட் நகரில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக லெபனானுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் லெபனான் அரசாங்கத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். வெடிப்பு சம்பவத்தினால் இதுவரை 154 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 5 ஆயிரம் பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெய்ரூட் நகரில் சுமார் 30 ஆயிரம் குடியிருப்புக்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சையளிப்பதற்காக தேவை ஏற்படும் இரத்தத்தை பெற்றுக்கொடுப்பதற்காக இன்றைய தினம் இரத்ததான நிகழ்வொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாக லெபனானுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை வெடிப்பு சம்பவத்திற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் பலத்த மோதல் ஏற்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.