தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைக்காதென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். எனினும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளோர் தேர்தல் தினத்தன்று மாலை 4.00 மணிக்கு பின்னர் வாக்களிக்க முடியும் என நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
அனேகமாக மாலை 4.00 மணிக்கு முன்னர் ஏனையோர் வாக்களித்து விடுவார்கள். இதனால் 4.00 மணிக்கு பின்னர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளோர் வாக்களிக்க சந்தர்ப்பம் காணப்படுகிறது. எவ்வறெனினும் வீடுகளில் தனிமைப்படுத்தலில் உள்ளோர் தமது வீட்டிலிருந்து பொது போக்குவரத்தில் பயணிக்காமல் தனிப்பட்ட வாகனங்களில் பயணித்து வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லுமாறு கோரிக்கை விடுப்பதாக விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார். அவர்களுக்கு வாக்களிக்க விசேட வாக்களிப்பு பிரிவும் தேர்தல் மத்திய நிலையங்களில் அமைக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.