இந்தியன் பிறீமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை உள்ளிட்ட மேலும் பல முக்கிய விடயங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதுதொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்வதற்காக இன்றைய தினம் ஐ.பி.எல். நிர்வாக சபை கூடவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிற்போடப்பட்ட ஐ.பி.எல் தொடரை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19ம் திகதி முதல் நவம்பர் மாதம் 8ம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விருப்ப கடிதத்தை இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அனுப்பியது. குறித்த கடிதம் கிடைத்துவிட்டதாக எமிரேட்ஸ் கிரிக்கட் சபையும் அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஐ.பி.எல் போட்டிகளை நடத்துவது தொடர்பிலும் அணிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்தும் இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படுமென இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.