19வது அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்தின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் இல்லாமல் ஆக்கப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற புத்திஜீவிகளுடனான சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி துர்திஷ்டவசமாக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தமையினால் புதிய கட்சியொன்றை தமக்கு ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் இங்கு தெரிவித்தார். எவ்வாறான தடைகள் ஏற்பட்ட போதிலும் இந்நாட்டில் உள்ள 69 இலட்சம் ம்ககள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக நியமிக்க ஆணை வழங்கினர். ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தை மக்கள் அங்கீகரித்தமையே இதற்கு பிரதான காரணம் என பிரதமர் இங்கு தெரிவித்தார்.
‘மலையகத்துக்கு செல்லும் போது வீட்டு பிரச்சினை காணப்படுகின்றது. அமைய போகும் அரசாங்கத்தில் விசேடமாக நீர்ப்பிரச்சினைக்கு தீர்வை பெற்று கொடுப்போம். நாம் மின்சாரத்தை நூற்றுக்கு நூறு வீதம் வழங்கினோம். வடக்கில் நிகழ்ந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் அங்கு சென்று பார்த்த போது மின்சார வசதிகள் இருக்கவில்லை. அப்பகுதிக்கு முழுமையாக மின்சாரத்தை வழங்கவும், பெருந்தெருக்கள், நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கு திட்டமிட்டு, வேலைகளை ஆரம்பித்த போது, கடந்த அரசாங்கம் இதனை உரிய முறையில் முன்னெடுக்கவில்லை. அதேபோன்று கடந்த அரசாங்கம் இப்பகுதிக்கு குறைந்தபட்சம் மண்னை கூட வாரவில்லை. இம்முறை தேர்தலில் எமக்கு சாதாரண வெற்றியல்ல. பாரிய வெற்றியே தேவை. 3ல் 2 வெற்றியே எமக்கு தேவையாக உள்ளது. இந்நாட்டில் 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவே ஆணை வழங்கினார்கள். அந்த வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வதே எமது நோக்கமாகும். ‘