புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்து 24 மணி நேரத்திற்குள் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வலஸ்முல்லையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சார்பில் பொது தேர்தலில்போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் கூட்டம் வலஸ்முல்லையில் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது. வேட்பாளர் தர்ஷன பிரதீப் மற்றும் முல்கிரிகல தொகுதி பிரதிநிதி சுஜித் முத்துகுமாரன ஆகியோர் இணைந்து இதனை ஒழுங்கு செய்திருந்தனர்.
“கிராம இராச்சியம் மற்றும் நகர இராச்சியம் என தேசிய வேலைத்திட்டம் ஒன்றை தற்போது நாம் ஆரம்பித்துள்ளோம். அனைத்து கிராமங்களும் சிறிய கிராமங்களும் சகல நகரங்களும் சகல சிறிய நகரங்களும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் அபிவிருத்தி செய்யப்படுகின்ற பாரியதொரு புரட்சி ஆரம்பிக்கப்படும். மீண்டும் ஒருமுறை கிராமங்களை அபிவிருத்தி செய்து நகரங்களையும் அபிவிருத்தி செய்து நாட்டை அபிவிருத்தி செய்யும் கிராம இராச்சியம் நகர இராச்சியம் வேலைத்திட்டத்தை ஹம்பாந்தோட்டையில் அமுல்படுத்துவதற்கு பொதுமக்களின் பிரதமராக நான் வருகை தருவேன் என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன். தொலைபேசியின் வெற்றியையடுத்து அரசாங்கம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரத்திற்குள் நாட்டின் எரிபொருள் விலையை குறைப்பேன் என உறுதியளிகிறேன்.”