சர்ச்சைக்குரிய குருநாகல் புவனேக்க ஹொட்டல் நடத்தப்பட்டு வந்த இடத்தின் நடவடிக்கைகள் தொடர்பான சகல ஆவணங்களையும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குருநாகல் நீதவான் நீதிமன்றம் குருநாகல் நகரபிதாவுக்கு உத்தரவிட்டது. வடமேல் மாகாண அபிவிருத்திக் குழு கூட்டங்களின் ஆவணங்கள் மற்றும் அனைத்து பதிவுகளையும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு ஏற்ப அரச சிரேஸ்ட சட்டத்தரணியொருவர் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் புவனேக்க கட்டடத்தை அகற்றிய சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குருநாகல் புவனேக்க அரசவை கட்டடத்தை உடைத்து அகற்றிய சம்பவம் தொடர்பாக குருநாகல் நகர பிதா துஸார சஞ்சிவ விதாரண மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவரை கைது செய்து நீதீமன்றத்தில் ஆஜர்படுத்தி சட்டநடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறுகோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரான நாமல் கருணாரத்ன இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.