மத்திய அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகளை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பணித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற பல பொதுக்கூட்டங்களில் ஜனாதிபதி இன்று கலந்துகொண்டார். பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வேன்களின் குத்தகை கட்டணத்தை செலுத்த மேலும் 6 மாத கால அவகாசத்தை வழங்க ஜனாதிபதி அங்கு இணக்கம் தெரிவித்தார்.
நஸ்டயீடு செலுத்துவது தொடர்பான பிரச்சினை காரணமாக மத்திய அதிவேக பாதையில் கொழும்பிலிருந்து குருநாகல் வரையான பாதையின் நிர்மாணப்பணிகள் தடைப்பட்டுள்ளன. இதற்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுத்து அதிவேக பாதையில் நிர்மாண பணிகளை பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி, அமைச்சர் ஜோன்ஸ்ட்ன பெர்னாண்டோவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பொதுஜன முன்னணியில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக இரண்டாவது நாளாகவும் குருநாகல் மாவட்டத்தில் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்த ஜனாதிபதி மாவத்தகம பொதுசந்தை வளவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டார். வேட்பாளர் கமல் பெரேரா இதனை ஏற்பாடு செய்திருந்தார்.
அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் போக்குவரத்து சேவை சங்கம் விடுத்த வேண்டுகோள் தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி பாடசாலை வேன்களுக்கான குத்தகை செலுத்த மேலும் 6 மாத கால அவகாசத்தை வழக்க இணக்கம் தெரிவித்தார். நிதஹஸ்கம வித்தியாதீப மற்றும் தேவாபொல குமார வித்தியாலம் ஆகியவற்றின் மைதானங்களை புனரமைத்து தருமாறு மாணவர்கள் விடுத்த வேண்டுகளை அடுத்து அதனை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி இராணுவத்தளபதியை பணித்துள்ளார். மாவத்தகம தேசிய பாடசாலையில் உள்ளக பூ பந்து உள்ளக மைதானமொன்றை நடத்தி தருமாறும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார். கஹபத்வல திட்ட அதிகாரிகளுக்கு சேவைநிலையக் கட்டடமொன்றையும் நிர்மாணித்துக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. சேர் ஜோன் கொத்தலாவல மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தவதாக தொடங்கஸ்லந்த பொதுமைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்தார். அதிபர் உட்பட மாணவர்கள் விடுத்த வேண்டுகோளை கருத்திற்கொண்டு இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த மைதானத்திலிருந்து தொடங்கஸ் லந்த, ரிதிகம வாராந்த சந்தைக்கு செல்லும் வீதியின் இருமருங்கிலும் கூடியிருந்த மக்களுடன் ஜனாதிபதி நட்புறவு ரீதியாக உரையாடினார்.
தொடங்கஸ் லந்த வைத்தியசாலைக்கு முன்னால் கூடியிருந்த ஊழியர்கள் விடுத்த வேண்டுகோளை கவனத்திற்கொண்ட ஜனாதிபதி வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை கண்டறிந்து தீர்த்து வைக்குமாறு அதிகாரிகளை பணித்துள்ளார். வேட்பாளர். ஆர்.டி. விமலதாச தொடங்கஸ்லந்த வாரசந்தை வளவில் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துகொண்டனர்.
சிறு ஏற்றுமதி பயிர்களின் விலையில் வீழ்ச்சி, போதைப்பொருள் கடத்தல்கள், வீதிகளில் நிலவும் குறைபாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டன. வேட்பாளர் சுமித் ராஜபக்ஸ அளவ்வ மைதானத்தில் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்துகொண்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பொதுஜன பெரமுனவின் தவிசளார் ஜீ.எல்.பிரிஸ் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
அளவ்வ நகரில் ரயில்வே கடவையில் மேம்பாலம் ஒன்றை நிர்மாணிப்பது உள்ளிட்ட நகர அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார். தம்பதெனிய வைத்தியசாலைக்கு சொந்தமான காணியில் தனியார் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டிருப்பது மற்றும் வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பாக பொதுமக்கள் ஜனாதிபதியை அறிவுறுத்தினர். வேட்பாளர் சாந்த பண்டார தம்பதெனிய அபிவிருத்தி வளவில் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
ஏற்றுமதி தடைப்பட்டமையினால் சிறு ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியும் பிரதமரும் அறிவுறுத்தப்பட்டனர். அப்பகுதிகளில் காணப்படும் போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பாக அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் ஜனாதிபதி செயலகத்திற்கு தகவல்களை வழங்க முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அங்கு தெரிவித்தார். வேட்பாளர் டிக்கிரிபண்டார அதிகாரி பொல்கஹவெல , வீரகமுகெத மைதானத்தில் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அங்கு கூடியிருந்த மக்களுடன் நட்புறவு ரீதியாக உரையாடினார்.