முன்பள்ளிகளை அமைச்சொன்றின் கீழ் கொண்டுவந்து குறித்த கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் மாத்தறை கடற்கரை பூங்காவில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். வேட்பாளரான நிபுண ரணவக்க குறித்த மக்கள் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தார். நிபுண ரணவக்கவின் 2020 ம் ஆண்டுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் அடங்கிய இணையத்தள பக்கமும் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த சில தினங்களாக ஜனாதிபதி கலந்துகொண்ட பல்வேறு மக்கள் சந்திப்புக்களின் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்குவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவதானம் செலுத்தியுள்ளார்.
பிள்ளைகளின் ஆரம்பகால வாழ்க்கையில் முக்கிய பகுதியாக முன்பள்ளிகளே காணப்படுகின்றன. இந்நிலையில் முன்பள்ளிகளின் தரம் மற்றும் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கல்வி முறை தொடர்பில் முக்கிய திட்டங்களை வகுக்க வேண்டியது கட்டாயமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர் அதற்கு முன்னுரிமை வழங்கி முன்பள்ளிகளை அமைச்சொன்றின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ருஹுணு பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்திலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கலந்துகொள்ளும் மாத்தறை மாவட்டத்திற்கான மக்கள் சந்திப்பு ஆரம்பமானது. உபபீடாதிபதி சிரேஸ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேனவுடன் நட்புறவுரீதியாக கலந்துரையாடிய ஜனாதிபதி கல்வி நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஒன்லைன் முறையிலான கல்வி நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக அதன்போது உபபீடாதிபதி குறிப்பிட்டார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஞ்சன விஜேயசேகரவினால் தெவிநுவர விகாரைக்கு முன்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் அதன்பின்னர் ஜனாதிபதி பங்கேற்றார். குறித்த பிரதேச மக்கள் எதிர்கொண்டுள்ள குடிநீர் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் இடைநடுவே கைவிடப்பட்டிருந்த தெவிநுவர விகாரையின் புனர்நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அமைச்சர் டளஸ் அழகப்பெருமவும் அங்கு வருகைதந்திருந்தார். வேட்பளார் மனோஜ் சிறிசேனவினார் மாத்தளை உயன்வத்த பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கலந்து கொண்டார். அங்கு வருகை தந்திருந்த மக்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்தார்.