வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி வரை நல்லூர் உற்சவம் இடம்பெறும். அதற்கான ஏற்பாடுகளை யாழ்.மாநகர் சபை, பொலிஸார், இராணுவம் இணைந்து முன்னெடுத்துள்ளன. யாழ். மாவட்டம் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக காணப்படும் நிலையில், சுகாதார நடைமுறைகளுக்கு அமைய பொதுமக்கள் உற்சவத்தில் கலந்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஆலயத்திற்கு வருகை தருவோர் அடையாள அட்டையும் எடுத்துவருவது அவசியமென யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் அடையாள அட்டையினை காண்பித்தன் பின்னரே ஆலயத்தினுள் நுழைய முடியும். வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர் ஆயின், அவர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த சான்றிதழை காண்பித்த பின்னரே, ஆலயத்தினுள் செல்ல அனுமதி வழங்கப்படும். ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றும் வகையில், கைகளை கழுவுதல், உடல் வெப்பநிலை பரிசோதனை என்பனவும் இடம்பெறவுள்ளது. அத்துடன் ஆலயத்திற்கு வருகைதருவோரின் முகம் கமராவிலும் பதிவு செய்யப்படுமென யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுகாதார நடைமுறைகள், அதிகளவான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஆலய உற்சவம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், அதிகளவான மக்கள் ஆலயத்திற்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.