நுவரெலிய மாவட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து, தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தலவாக்கலை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பாடசாலைகளில் விளையாட்டு மற்றும் பாட இணைசெயற்பாடுகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் மாணவர்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும், ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கென நுவரெலியா மற்றும் அன்மித்த மாவட்டங்களில் ஆசிரியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே லிந்துல நகர சபையில் ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெறுவதாகவும் மக்கள் ஜனாதிபதிடம் சுட்டிக்காட்டினர். பொது தேர்தலில் – ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி நேற்று நுவரெலிய மாவட்டத்திற்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலளரும், நுவரெலிய மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் கொட்டகலையில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்திலும் ஜனாதிபதி பங்கேற்றார்.
இதேவேளை ஹங்குராங்கெத்த, வலப்பனை, கந்தப்பளை, நுவரெலியா, கொத்மலை, நோர்வூட் மற்றும் மஸ்கெலியா ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புக்களிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.