அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 14 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சாட்சியாளர்கள் இரண்டு பேரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதற்கு முன்னர் பொலிசார் அவர்களை அழைத்து சென்றதாக குறிப்பிட்டு உயிரிழந்த நபரின் உறவினர்கள் உள்ளிட்டோர் அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பு குழப்பம் விளைவித்தனர். அதன்போது பொலிஸ் நிலையம் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அதன்போது பொலிஸ் நிலையத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதோடு அரச அதிகாரிகள் சிலரும் காயமடைந்தனர். சம்பவத்தோடு தொடர்புடைய 9 பெண்கள் உள்ளிட்ட 14 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவர்கள் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தலா ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஒக்டோபர் மாதம் 23 ம் திகதி குறித்த வழக்கு விசாரணை மீண்டும் இடம்பெறவுள்ளது.