நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் சிங்கப்பூர் அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை மீள ஆராயுமாறு குறிப்பிட்டு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு அது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள விதம் அரசியல் அமைப்புக்கு முரணானதென குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களினால் அடிப்படை உரிமை மீறல்கள் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தில் குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று இடம்பெற்றது.
அதன்போது குறித்த ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக முழுமையாக ஆராயவில்லையெனவும் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக சட்டமா அதிபர் குறிப்பிட்டார். மேலும் கால அவகாசம் தேவையென அவர் கோரிக்கை விடுத்த நிலையில் அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் நவம்பர் மாதம் 3 ம் திகதி மனுக்களை மீள விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
அன்றையதினம் விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் சட்டமா அதிபருக்கு உச்சநீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது. சிங்கப்பூர் இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பாராளுமன்ற அனுமதியின்றி கைச்சாத்திடப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் கூடுதல் நன்மைகள் சிங்கப்பூருக்கு கிடைக்கப்பெறுவதாகவும் இலங்கையின் வர்த்தக துறை மற்றும் தொழில் துறையினருக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதன்காரணமாக குறித்த ஒப்பந்தம் அரசியல் அமைப்புக்கு முரணனாக கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு அதனை செல்லுபடியற்றதாக உத்தரவிடுமாறு மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.