மொரட்டுவை லுனாவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகம் ஒன்றில் மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் சார்ஜன், பொலிஸ் கான்ஸ்டபள் மற்றும் பொலிஸ் சாரதி ஆகியோரே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பதில் பொலிஸ் மா அதிபரினூடாக முன்னெடுக்கப்பட்ட உள்ளக விசாரணை அறிக்கையின் அடிப்படையில் கல்கிஸ்ஸை சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு ஏற்படுத்திய நபரொருவர் பொலிசாரின் துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் மொரட்டுவை லுனாவ பாலத்திற்கு அருகில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள், திடீர் வீதித்தடைகளை ஏற்படுத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்போது இரு முற்சக்கர வண்டிகளை நிறுத்தி சோதனையிட பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். குறித்த சந்தர்ப்பத்தில் முற்சக்கரவண்டியொன்றில் வருகைதந்த நபரொருவர், அதிகாரிகள் மீது கற்களால் தாக்குதல் நடத்தி, வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், காயமடைந்த நபர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மொரட்டுவை லுனாவ பகுதியைச் சேர்ந்த 39 வயதான நபரே உயிரிழந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளது.