வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மற்றுமொரு கைதிக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் இதற்குமுன்னர் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளருடன் பழகியவர் என தெரியவந்துள்ளது. இதன்மூலம் நேற்றைய தினத்தில் மாத்திரம் 297 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அதில் 283 பேர், கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்தவர்கள். 13 பேர் , வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தவர்களெனவும், சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 451 ஆக காணப்படுகின்றது.
இதேவேளை கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் அலுவலக குழுவைச் சேர்ந்த ஆயிரத்து 150 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விடுமுறையில் சென்றுள்ள குறித்த மத்தியநிலையத்தின் ஊழியர்பளையும் மீள அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களினால் சமூகத்தில் நோய் பரவுவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்படமாட்டாதென இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.