தானியங்கள் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதால் உள்நாட்டு தானிய வகைகளை அதிக விலைக்கு சந்தைக்கு விநியோகிக்கும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சோளம், கௌப்பி, பயறு, குரக்கன் போன்ற தானியங்களை அதிகளவில் செய்கை செய்வதற்கு ஆர்வம் செலுத்துமாறு ஜனாதிபதி விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் இயற்கை உரத்தை அதிகளவில் பயன்படுத்துவதும் முக்கியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரம் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் முகங்கொடுத்துள்ள உரம் மற்றும் நீர்ப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களை பாதுகாக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். தலாவ, தெம்மன்னாவ, சுதந்திர பூங்கா கிராமத்திற்கு சென்ற ஜனாதிபதி அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார். இதனையடுத்து ஈரியகம குளத்தை பார்வையிட்ட ஜனாதிபதி குறைபாடுகள் மற்றும் நீர்வழங்கல் தொடர்பாகவும் கேட்டறிந்தார். பிரச்சினைகளுக்கு உடனடிதீர்வை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வதிவிட முகாiமையாளருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் கிராமிய வீதிகளின் திருத்தப்பணிகள் தொடர்பிலும் ஜனாதிபதி பொதுமக்களிடம் தகவல்களை கேட்டறிந்தார். மக்கள் எதிர்நோக்கியுள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார். குறித்த நிகழ்வில் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் ஆகியோர் கலந்துகொண்டனர்.